கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தேவை – பியூஷ் கோயலிடம் செல்போனில் பேசிய தமிழக முதல்வர்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் விற்கப்படுவதை தவிர்க்க, சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கீழ்பாக்கத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், மருந்து வாங்க மக்கள் இரவு பகலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து கோவை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மையங்கள் அதிகரிக்கப்பட்டாலும், மருந்து இருப்பு குறைவாக உள்ளதால், மக்களுக்கு ரெம்டெசிவிர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஒரு விற்பனை மையத்தில் 500 குப்பி மருந்துகள் மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. இதனால், 83 நபர்களுக்கு மட்டுமே அந்த மருந்து கிடைக்கும். மற்றவர்களுக்கு மருந்து கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து தேவை உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
பியூஷ் கோயலிடம் செல்போன் வாயிலாக பேசிய தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் 1.45 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் நுரையீரல் அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.