முழு ஊரடங்கு - போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடியது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் வருகின்ற 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்களை எச்சரிக்கை செய்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு செல்லும் மாநில எல்லைப் பகுதியான நல்லாடை காவல் சோதனை சாவடி மற்றும் பொறையார் நன்டலாறு காவல் சோதனைச் சாவடி எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்களை மட்டுமே மாவட்ட எல்லைக்குள் வருவதற்கு அனுமதிப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.