ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!
ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதிவியேற்றார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தன. அதில், 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்ட முதல் 5 திட்டங்களில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டமும் ஒன்று. நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். வருகிற 15ம் தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரேசன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ரேசன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, வீடு வீடாகச் சென்று டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்தப் பணி தொடங்க உள்ளது. ரேசன் கடை பணியாளர்கள் ரேசன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்க இருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் 15ம் தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.