ஆக்சிஜன் அதிகரிப்பு குறித்து வீடியோ வெளியிட்டவர் மீது போலீசில் புகார்!
ஆக்சிஜனை அதிகரிப்பது குறித்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட விவகாரத்தில், ஹீலர் பாஸ்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆக்சிஜனை அதிகரிப்பது குறித்து ஹீலர் பாஸ்கர் யூ-டியூபில் காணொளி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாஸ்கர் பொதுமக்களை தவறான பாதையில் நடத்தி செல்வதாக கூறி கோவை சைபர் க்ரைம் போலீசில் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ரேணு கோபால் என்பவர் அளித்துள்ள அந்த மனுவில், கொரோனா தொற்று நோய் பாதிப்பின்போது ஆக்சிஜனை எவ்வாறு அதிகரிப்பது என்ற பெயரில் யூடியூப் வழியாக, அவர் பொதுமக்களை தவறாக வழி நடத்தி செல்ல முயற்சி செய்து வருகிறார். எனவே, இந்த விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் மீது சைபர் குற்றத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.