அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பிறப்பித்த உத்தரவு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும் என அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அக்கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் தெரிவித்ததாவது -
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பதை கண்காணிக்க வேண்டும். முழு ஊரடங்கு முறையாக அமல்படுத்துவதில் உறுதிப்படுத்த வேண்டும். ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளுக்கு தரமான உணவுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்விதமான சூழ்நிலையிலும் ஆக்சிஜன் வீண் போகக் கூடாது. மருத்துவமனைகளில் முறையாக ஆக்சிஜன் பயன்படுத்த வேண்டும். ரெம்டெசிவர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பனையாவதைத் தடுக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்ற வேண்டும்.
அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அனைவரும் இணைந்து செயல்பட உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.