கொரோனா பரவல் தடுப்பு குறித்து மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதிவியேற்க உள்ளார். இதனையடுத்து, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு தோறும் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று புதிய கட்டுபாடுகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடைபெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்த உள்ளார்.