அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டம்!
கடந்த 2ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. அதில், திமுக 159 இடங்களை கைப்பற்றியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
இத்தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அதிரடியாக கையிலெடுத்தார் மு.க ஸ்டாலின்.
நேற்று தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் அவசரமாக ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.