தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் : கமல்ஹாசன்!
சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்லுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே 2) நடைபெற்றது.
இந்த வாக்கு முடிவில் பெரும்பான்மையான இடங்களை பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கின. கோவைத் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அவர் 51,481 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2021
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.