தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் - சத்யபிரதா சாகு
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியதாவது -
6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. புதிதாக 6 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும்.
தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. நாளை வாக்கு எண்ணிக்கை பணியில் 35 ஆயிரத்து 836 அதிகாரிகள் ஈடுபட இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.