தமிழக சட்டசபைத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

tamilnadu
By Nandhini May 01, 2021 08:09 AM GMT
Report

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லுரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் இருப்பார். சென்னையில் மட்டும் 1248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகும். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி மறுக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினி, முக கவசம் விநியோகம் செய்ய சுகாதார குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது | Tamilnadu

மேலும், வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் உயர் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்ய வரும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை ராணிமேரி கல்லூரியில் கட்டுப்பாட்டு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அவர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க தொகுதி வாரியாக செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முகவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயன்படுத்துவதற்காக தற்காலிக நகரும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தின் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி, முகவர்களின் வாகனங்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வெளிப்புற பகுதியில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

களத்தில் உள்ள 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் வெற்றி பெறுகிறவர்கள் யார் என்பது நாளை தெரிய வரும். தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்ட சபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.