சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2000 படுக்கைகளை சில தினங்களுக்குள் உருவாக்கப்படும் : மாநகராட்சி ஆணையர்
சென்னையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 2000 படுக்கைகள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையர் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையம் விரிவான இடமாக உள்ளது. அதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 1000 படுக்கை வசதியை ஏற்படுத்த அடிப்படை பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் 860 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளாக இருக்கும்.
மீதமுள்ள படுக்கைகள் சாதாரண வசதிகளுடன் கூடியதாக இருக்கும். ஈஞ்சம்பாக்கம், மணலியில் இருக்கும் சுகாதார மையத்தில் தலா 100 படுக்கைகள் உள்ளது. இந்த படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்படும். இந்தப் பணிகள் பத்து நாட்களுக்குள் நிறைவு பெறும். தண்டையார்பேட்டையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2000 படுக்கைகளை சில தினங்களுக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றார்.