ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு வழிவிட்டது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி - வைகோ ஆவேசம்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தமிழக அரசு வழிவிட்டது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996 இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், மறியல், முற்றுகை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்கள் நடத்திய அளவிற்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது.
பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997 இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது.
அதன்பிறகு, நான் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது.
தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது.
மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.