வளர்ப்பு நாயை மரத்தில் கட்டி ரத்தம் வழிய வழிய அடித்துக் கொலை - 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
கோவையில் வளர்ப்பு நாயை மரத்தில் கட்டி வைத்து ரத்தம் வழிய வழிய கொடூரமாக அடித்துக் கொலை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது நாய், வீட்டில் குடியிருக்கும் சீனவாசன் என்பவரது உறவினரை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாயை மரத்தில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். இவர் தாக்கியதில் நாய்க்கு தலையிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. நாய் வலி தாங்க முடியாமல் கத்தியது. இதைப் பார்த்தும் ஈவு, இரக்கமின்றி நாய்யைக் கடுமையாக தாக்கிக் கொண்டே இருந்துள்ளார். பலத்த காயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துப் போனது.
இதுகுறித்து, விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனே விலங்குகள் நல வாரிய அதிகாரி பிரதீப் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, நாய் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞர் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினரைக் கடித்த நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.