மதுசூதனன் மனைவி மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்
அதிமுக மூத்த தலைவரும், அவைத்தலைவருமான மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி அவரால் முடியாத நிலையிலும், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வந்து வாக்களித்து விட்டுச் சென்றார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுசூதனனின் மனைவி ஜீவா திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுசூதனன் மருத்துவமனையில் இருக்கும்போதே அவரது மனைவி உயிரிழந்தது அதிமுக மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுசூதனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஜீவா மதுசூதனனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.