பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு வந்த ஆபத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை அனுமதி இன்றியும் வைத்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.
அப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.
தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும். அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சாலை ஓரங்கள், சாலை நடுவில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும். மேலும் தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலைகளை அகற்றுவது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.