10 மாவட்டங்களில் கனமழை... 3 நாட்களுக்கு நீடிக்கும்!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு ,திருப்பூர் ,விருதுநகர் ,புதுக்கோட்டை ,பெரம்பலூர், அரியலூர், கடலூர் ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தேனி, திண்டுக்கல், மதுரை ,திருச்சி ,சேலம் ,கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் வருகின்ற 5ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.