செம்மரம் வெட்டச்சென்றதாக 5 சிறுவர்கள் உட்பட 21 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செயல்பட்டுவரும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் புத்தூர் அடுத்த உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தமிழகத்தில் இருந்து வந்த இரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் 20க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரியில் இருந்த ஓட்டுநர் உள்பட 21 பேரை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 21 பேரில் 5 பேர் சிறுவர்கள் என்றும், அனைவரும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து கடப்பாரை, கோடாரி மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், செம்மரம் வெட்ட ஆட்களை அழைத்து சென்ற அமரேசன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.