தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் விஜயின் செயலை விமர்ச்சித்த அப்பாவு
மாநில அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வைத்துள்ள கோரிக்கை குறித்து அப்பாவு விமர்சித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள்,பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்திய பிரதமரிடம் முறையாக அறிவித்துள்ளதை முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது” என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞரால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.
இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்” எனத் தெரிவித்துள்ளார்.