தமிழகம் என நான் கூறியதற்கு காரணம் இதுதான் : ஆளுநர் விளக்கம்
காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது.
தமிழ்நாடு சர்ச்சை
கடந்த சில நாட்களாக ஆளுநர் ஆர்.என் ரவி குறித்து தமிழகம் , தமிழ்நாடு சர்ச்சை பெரும் சர்ச்சையினை கிளப்பியது, இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
ஆளுநர் விளக்கம்
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடுஎன்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.