விஜய் வருகையால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்ததா? - தரவுகள் சொல்வது என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிகளவில் வாக்குசதவீதம் உயர்ந்ததற்கு விஜய்யின் அரசியல் வருகைதான் காரணம் என தவெகவினர் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உயர்ந்த வாக்குசதவீதம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், கட்சி முகவர்களின் முன்னிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இந்த தேர்தலில், 85.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 73.83 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த முறை 11.52 சதவீதம் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்தமுறையே அதிக வாக்குப்பதிவு சதவீதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெகவினர் பலரும் விஜய்யின் தவெக வருகையால்தான் இந்த முறை அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்தற்கு விஜய் மட்டும் காரணம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், 6.29 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், 4.63 கோடி பேர் வாக்களித்த நிலையில், வாக்குசதவீதம் 73.63 சதவீதமாக இருந்தது.
இந்த முறை தேர்தலுக்கு முன்னர் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்திற்கு பின்னர், லட்சக்கணக்கானோரின் வாக்குகளை நீக்கிவிட்டு 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், 14.59 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். வாக்களித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த தேர்தலை விட 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
இதே போல், 2006 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும், அதற்கு முந்தைய தேர்தலை விட 11.49 சதவீதம் வாக்குப்பதிவு உயர்ந்தது. அந்த தேர்தலிலும், முந்தைய தேர்தலை விட மொத்த வாக்களிக்க தகுதியுடையவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் இவ்வாறாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்வது வழக்கமான ஒன்றுதான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது, நேற்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலிலும், இதுவரை இல்லாத வகையில், 92.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.