மிரட்டும் கொரோனா .. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - அதிகாரிகளுடன் முதலமைச்சர் பேசியது என்ன?
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபடுமா ? மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தலாமா? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.