தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை - முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி , கடந்த 12ஆம் தேதி சிறைபிடித்தனர். தமிழக மீனவர்களான ரவி, ஆனந்தமணி, ராஜா, வீரையன் மகன் ரவி, மதிபாலன், காத்தலிங்கம், ராமமூர்த்தி, அன்பு, வேல்மயில், ரகு, தினேஷ், சித்திரைவேல் உள்ளிட்டோர் கடந்த ஏழாம் தேதி மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடந்த 12ஆம் தேதி வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
முதலமைச்சர் கடிதம்
இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் விசைப்படகுருடன் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்தில் மட்டும் இது மூன்றாவது சம்பவமாகும்.
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.