ரூ.1,084.80 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் ரூ.1,084.80 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி சென்றார்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் தாயனூரில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகரில் நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் நகர பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டடங்கள்,
மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுப்படுத்தப்பட்ட பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள்,
மருங்காபுரி வட்டாரத்துக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமையம், மன்னார்புரத்தில் மண் பரி சோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம்,
ஓடைத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
அதற்காக முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 28 அரசுதுறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.