கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம் - இலங்கை அகதிகளுடன் தேச விரோதிகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு என எச்சரிக்கை
இலங்கையில் இருந்து தப்பி ஓடிய 58 சிறை கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக கூறி தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று முந்தினம் ராஜினாமா செய்தார்.
அதேசமயம் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.
இந்தநிலையில் பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து ராஜபக்ச நேற்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர்கள் ஜெட் படகில் சோபர் தீவிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
இலங்கை முழுக்க கலவர பூமி ஆனது. இதனிடையே, இலங்கை சிறையில் இருந்து சிறைக்கைதிகள் பலர் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இது மேலும் பதற்றமான சூழலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இலங்கையில் இருந்து தப்பி ஓடிய 58 சிறை கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக கூறி தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் அசாதாரண சூழ்நிலையால் அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என்பதால், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலை புலி இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலில் ரோந்து பணியை தமிழக கடலோர பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் தொடரில் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.