தனி தனி தீவுகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்
தமிழகத்தை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தனி தனி தீவுகளில் சிறைப்பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் கடந்த 24ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் 2000ககும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்து 20 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்தனர்.
மேலும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும், திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 விசைப்படகையும் அதிலிருந்த 20 மீனவர்கள் என மொத்தம் 54 தமிழக மீனவர்களை ஒரே நாளில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
தற்போது இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீனவர்களை இலங்கையின் இரண்டு தீவுகளில் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.