ஆப்கான் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : தாலிபான்களின் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து படிப்புக்காக பல பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். பெண்களை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.
கல்லூரி மாணவிகள், சின்ன சின்ன குழந்தைகள் நடத்திய போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு உலக நாடுகள் தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பெண்களுக்கு எதிரான சில கட்டுபாடுகளைத் தளர்த்தியது தாலிபான் அரசு. தற்போது சில மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் கல்வி பயில எந்த தடையையும் தாலிபான்கள் விதிக்கவில்லை. ஆனால், நாட்டின் பிற மாகாணங்களில் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தடை இருக்கிறது. பெரும்பாலான மாகாணங்களில் 7 ஆம் வகுப்புக்கு மேலே உள்ள வகுப்புகளில் மாணவிகள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் மார்ச் 21 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான் கலாச்சாரத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் தாலிபான் மாணவிகள் மீண்டும் பள்ளிக்குப் போகத் தயாராகி வருகிறார்கள். தாலிபான்களின் இந்த முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.