தலிபான்களின் புதிய கொள்கை முடிவு : பெண்களுக்கு சலுகையா?
ஆப்கானிஸ்தானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் கல்வி பயிலலாம் என தலிபான்களின் புதிய கொள்கை முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபாலர் கல்வி முறை கிடையாது.
கடுமையான உடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். கடந்த 1996-2001 வரை தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. பெண்கள் உரிமை நசுக்கப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பானது. ஆனால், இம்முறை பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலிபான் அரசின் உயர் கல்வி அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி, கல்வித் துறையில் தலிபான்களின் புதிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். அதில் அவர், ''20 ஆண்டை பின்நோக்கி பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இன்று இருப்பதை கொண்டு புதிய தொடக்கத்தை துவங்கப் போகிறோம்.
ஆப்கானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் பயிலலாம். ஆனால், பல்கலைக் கழகங்களில் இருபாலர் சேர்ந்து படிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பெண்களுக்கான தனி கல்லூரியில் அவர்கள் பயிலலாம். அவர்களுக்கு நிச்சயம் ஆடை கட்டுப்பாடு உண்டு. புர்கா, ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும். அதே சமயம், முகத்தை மூடுவது, ஸ்கார்ப் அணிவது அவரவர் விருப்பம்,' என்றார்.
அதே சமயம் தற்போதுள்ள பாடத்திட்டங்கள் மாற்றங்கள் வரும் என்பதை மட்டும் அமைச்சர் ஹக்கானி கூறி உள்ளார். தலிபான்கள் பெரும்பாலும் மத கல்வியையே போதிப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன.