தனிஷ் சித்திக் இறந்த விதம் குறித்து தெரியாது : தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்
தலிபான் போரில் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் தனிஷ் சித்திக் இறப்புக்கு அமெரிக்க அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான்களுக்கும் இடையே அதிகளவில் மோதல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்தார்.
காந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த அவருக்கு பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், தனிஷ் சித்திக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர் இறந்த விதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்கள் போர்க்களத்துக்குள் செல்லும்போது எங்களிடம் தகவல் தெரிவித்து சென்றால், உரிய பாதுகாப்புகளை எங்களால் வழங்க இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.