காலையில் தாலி கட்டிய புதுமாப்பிள்ளை! மாலையில் மரணம்
ராமநாதபுரத்தில் திருமணத்தன்று காலையில் தாலி கட்டிய புதுமாப்பிள்ளை மாலையில் மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரத்தின் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளம்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி, இவரது மகன் விக்னேஸ்வரன்(வயது 27).
இவருக்கும், சாயல்குடியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடுகுசந்தை முத்துராமலிங்கபுரம் அம்மன் கோவிலில் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது. காலை 10.30 மணியளவில் சொந்தபந்தங்கள் சூழ திருமணம் நடைபெற்ற நிலையில், மதியம் மணமகள் வீட்டுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென விக்னேஸ்வரனுக்கு நெஞ்சுவலிக்கவே, உடனடியாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார், காலையில் புதுமாப்பிள்ளையாக ஜொலித்தவர் மாலையில் மரணமடைந்தது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.