தாஜ்மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம்: பாஜக எம்.எல்.ஏ பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்தது
உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ் மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. தாஜ் மஹாலை ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். ஆனால், தாஜ் மஹால் இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோயில் இருந்ததாக பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவைகள் உரிமை கோரி வருகிறார்கள்.
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளார். இதனால், சர்ச்சை எழுந்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆக்ராவின் தாஜ்மஹால், ஒருகாலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்தது.
எனவே, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” என்றார். பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் இதற்கு முன்பும் இதுபோன்று பேசி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதே வகையில், தாஜ் மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது சிவாஜி மஹால் அல்லது கிருஷ்ணர் மஹால் என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் பேசி வருகிறார். இது பெரும் சர்ச்சையும், பரபரப்பையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது.