கவுகாத்தியில் உயிரிழந்த தமிழக டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் உடல் சென்னை வந்தது
கவுகாத்தியில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே டிராய்லர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், படுகாயாங்களுடன் விஸ்வா தீனதயாளன் அருகே உள்ள நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தீனதயாளனின் உடல் இன்று கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கண்ணீர் மல்க அவரது உறவினர்களும்,பெற்றோர்களும் பெற்றுக்கொண்டு அண்ணாநகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.
ஏப்ரல் 27-ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொடர்ந்து தமிழக முதல்வர் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விஷ்வா தீனதயாளன் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.