T20 உலக கோப்பை - இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை மறைமுகமாக விமர்சித்த கவாஸ்கர்...!
இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கவாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சமீபத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா
கடந்த 27ம் தேதி சிட்னியில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தீர்மானித்தது. இப்போட்டியின் இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி
நேற்று முன்தினம் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
அஸ்வினை மறைமுகமாக விமர்சித்த கவாஸ்கர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் ஓவரில் விராட் கோலியும், ரோகித் சர்மா ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்-
கேட்சை நழுவ விடுவது, ரன்-அவுட் வாய்ப்பை மிஸ் செய்வது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கக் கூடியது ஒன்றுதான். எந்தவொரு வீரரையும் தோல்விக்காக குற்றம் சுமத்த முடியாது. அதிர்ஷ்டம் உங்களுடைய பக்கம் இல்லாதபோது, பெரிய வீரர்களும் கேட்ச் பிடிக்க தவறிவிடுவார்கள்.
இந்திய பந்து வீச்சின்போது ஒரு வீரர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தது முக்கிய பிரச்சினையாக நான் நம்புகிறேன் என்றார். இவரின் இந்த கருத்தை உற்றுநோக்கிய ரசிகர்கள், கவாஸ்கர் மறைமுகமாக அஸ்வினை தான் சாடுகிறார்.
அஸ்வின் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா விளையாடியபோது, 4 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டு கொடுத்தார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.