டி.20 உலகக்கோப்பை - தனது இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! யார் யார் தெரியுமா?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சபா கரீம் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஆறு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.
அதே போல் விண்டீஸ் அணி 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணிக்கு கனவாக இருக்கும் உலகக்கோப்பையை வெல்வதற்கு தேவையான முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் இந்நாள் வீரர்கள் சிலர் இந்த வருட உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான சபா கரீம், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். தனது அணியில் சீனியர் வீரர் ஷிகர் தவானை புறக்கணித்துள்ள சபா கரீம், துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ளார்.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள சபா கரீம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் வாசிங்டன் சுந்தர், நடராஜன், பும்ராஹ், ராகுல் சாஹர், தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை தேர்வு செய்துள்ள சபா கரீம், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, சாஹல்,குல்தீப் யாதவ் போன்ற வீரர்களை தனது அணியில் எடுக்கவில்லை.
You May Like This Video