இந்திய டி20 கேப்டன் ஆனார் ரோகித் சர்மா - ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேற, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும், கடைசி மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால் இந்த தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தவிர்த்து கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.