தங்கக் கடத்தலில் முதலமைச்சருக்கும் பங்கு - ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ்
கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதலமைச்சர் பினராயி விஜயன்
ஸ்வப்னா சுரேஷ் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறினார்.
மேலும், கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.