ஓரம் கட்டப்படும் விராட் கோலி - அவரின் இடத்தில் களமிறங்கும் அறிமுக வீரர் : அதிர்ச்சியில் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு நியூசிலாந்தை பழிவாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் இடங்களில் இளம் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார், ஜூலை மாதத்திலேயே ஒருநாள் போட்டியிலும் தடம்பதித்தார். இந்நிலையில் இதே ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
31 வயதாகும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 77 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம் மற்றும் 26 அரைசதத்துடன் 5,356 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது. எனவே கோலி இல்லாத சமயத்திலேயே சூர்யகுமார் யாதவை உபயோகப்படுத்தி பார்த்துவிட வேண்டும் என ராகுல் டிராவிட் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் சிறப்பாக விளையாடிவிட்டால், கோலிக்கு அடுத்தபடியாக அணியில் அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This