தோனியின் அன்புக்கு எல்லையே கிடையாது - நடிகர் சூர்யா புகழாரம்
சென்னை அணி கேப்டன் தோனியுடனான அன்பு எப்படிப்பட்டது என நடிகர் சூர்யா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதனிடையே இறுதிப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் நடிகர் சூர்யா தோனி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தோனி நம்மிடம் செலுத்தும் அன்பு என்பது அளப்பரியது. அதை நாம் எப்படி திரும்பக் கொடுப்பது என்று எண்ணி நான் தவித்தது உண்டு. சமீபத்தில் கூட போட்டியின்போது ஆட்டத்தை காண வந்த சிறுமி கண்கலங்கி இருந்தார். அதனை கண்ட தோனி போட்டி முடிந்த பிறகு மேட்ச் பாலில் கையெழுத்து போட்டு அந்த சிறுமியிடம் பரிசாக கொடுத்து ஆனந்த படுத்தினார். இப்படி தோனி அன்பு ரசிகர்கள் மீது இருப்பது அளப்பரியது.
எனது குழந்தைகளை கூட அவர் நேரில் சந்தித்திருக்கிறார். அதுமட்டுமின்றி எனது மனைவி ஜோதிகாவும் அவரை சந்திக்க வேண்டும் என என்னிடம் கேட்டார். அதற்கும் தோனி எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார் எனக் கூறியிருந்தார்.
மேலும் 24 என்கிற தமிழ் படத்தில் நடித்தபோது தோனியை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துக் கொள்வது போல ஒரு காட்சி அமைந்திருக்கும், அந்த காட்சிக்கும் தோனி சம்மதம் சொல்லியிருந்தார். இப்படி அவருடைய அன்புக்கு எல்லையே கிடையாது. அவருக்கு நாம் எப்படி அன்பை திருப்பி செலுத்தும் என்பதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும் என சூர்யா புகழ்ந்துள்ளார்.