நாசாவும் இல்ல...இஸ்ரோவும் இல்ல....சூரத் ஆசாமியை சுற்றிவளைத்த போலீசார்
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் இஸ்ரோவில் பணியாற்றியதாகவும் தான்தான் சந்திரயான் 3 லேண்டரை உருவாக்கியதாகவும் கூறிய நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்திரயான் 3 பயணம்
நிலவின் தென்துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள தனது இரண்டாவது முயற்சியில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்று உலகநாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இது வரை நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு விண்கலமும் இறங்காத நிலையில், அதனை இந்திய விஞ்ஞானிகள் செய்து காட்டி இருக்கிறார்கள்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கவனத்தையும் இந்திய பக்கம் இந்த சாதனை திரும்பியுள்ள நிலையில், தற்போது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சூரத் ஆசாமி
குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி அவர், தான் ஒரு பி.ஹெச்டி பட்டம் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி என்றும். சந்திராயன்-3ன் விக்ரம் லேண்டரை தானே வடிவமைத்ததாக, கடந்த வியாழக்கிழமை அன்று குஜராத்தை சேர்ந்த உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மேலும், தான் சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றியதால், சந்திரயான்-3லும் பணியாற்ற அழைக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்குவதற்கு, லெண்டரில் தான் செய்த மாற்றங்கள்தான் காரணம் என்றும் அவர் கூறி வருகின்றார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது இஸ்ரோவில் பணியாற்றியதற்கான சான்றுகளை தருமாறு கேட்டால் அவர் அதை தர முன் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் அவர் ஒரு பிகாம் பட்டதாரி என்பதும் அவர் இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.