சூரனை வதம் செய்த முருக பெருமான் - விண்ணை முட்டிய அரோகரா கோஷம்

Festival
By Thahir Nov 18, 2023 02:01 PM GMT
Report

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடற்கரையில் முருகர் ஜெயந்தி நாதர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவிந்தனர்.

சூரசம்ஹார நிகழ்வு 

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

4ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனையும், யாகசாலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 6ம் நாள் கந்த சஷ்டி இன்று. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் இன்று நடைபெற்றது.

சூரனை வதம் செய்த முருக பெருமான் - விண்ணை முட்டிய அரோகரா கோஷம் | Surasamharam Completed In Tiruchendur

சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்தார். அப்போது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் முழங்கினர். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர். ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் இருந்தனர்.