தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சந்திக்க இருக்கும் ஆபத்து! உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியமான தீர்ப்பு
மகாராஷ்டிரா அரசு மராத்தா பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு அம்மாநிலத்தின் மராத்தா பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியிருந்தது. இதன் பிறகு இடஒதுக்கீட்டின் அளவு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% என்பதை கடந்துவிட்டது.
மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை பம்பாய் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்திருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் மராத்தா இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு தொடர்ந்து விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் விதித்துள்ள 50% என்கிற வரம்பை மாற்றப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.