ரூ.35,000 கோடியை எப்படி செலவு செய்யப்போறீங்க? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இரண்டாம் அலை பாதிப்புகள் மெல்ல குறைந்தாலும் தடுப்பூசி செலுத்துவதை விரைந்து தீவிரப்படுத்த வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் கொள்கை மிகவும் பிழையானது என உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி எவ்வாறு செலவு செய்யப்படுகிறது. எந்தெந்த தேதிகளில் எவ்வளவு தடுப்பூசிகள் வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என்பது தொடர்பாக முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ரூ.35,000 கோடியை வைத்து 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல் இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இலவசமாகவும் அதற்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் கொள்கை மிகவும் பிழையானது.
மத்திய அரசுக்கு ஒரு விலைக்கும் மாநில அரசுகளுக்கு ஒரு விலைக்கும் தடுப்பூசிகள் விற்கப்படுவதை ஏற்கமுடியாது. மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துபது தொடர்பாக மாநில அரசுகள் தங்களுடைய நிலைப்பாட்டை இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அதற்குள்ளாக ஒன்றிய அரசு தடுப்பூசி கொள்கை தொடர்பான அனைத்து தரவுகளும் மற்றும் ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.