XXX வெப்சீரிஸ்..இளைஞர்களை கெடுக்குறீங்க - பிரபல தயாரிப்பாளருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஏக்தா கபூர்
பாலிவுட்டில் ஏக்தா கபூர் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது தயாரிப்பில் XXX என்ற இணையத் தொடர் வெளிவந்துள்ளது. இந்த தொடர், ‘ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உணர்வுகளை அவமதிப்பதாக உள்ளது’ என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபல ஓடிடி தளமான அல்ட் பாலாஜியில் இந்த இணையத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஏக்தா கபூருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி. ரவிகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
XXX வெப்சீரிஸ்
அப்போது ஏக்தா கபூரிடம், ‘நீங்கள் இந்திய இளைஞர்கள் மனதை கெடுக்கும் வேலைகளில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் தயாரித்த இணையத் தொடர் எல்லோராலும் பார்க்கப்படுகிறது. மக்களுக்கு எந்தவிதமான படத்தை நீங்கள் வழங்குகிறார்கள்? நல்ல படத்தை அளிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் மனதை மாசுபடுத்துகிறீர்கள்.
இளைஞர்களை கெடுக்கும் வேலையை செய்யாதீர்கள்’ என்று கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோத்தகி, ‘சந்தாதாரர்கள் மட்டுமே XXX இணைய தொடரை பார்க்க முடியும்.
அதற்கு இந்த நாட்டில் எல்லா உரிமையும் உண்டு’ என தெரிவித்தார்.
மேலும், பீகாரில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்றில், ஏக்தா கபூருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார்.