மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகர் கைது

By Petchi Avudaiappan Jun 13, 2021 06:19 PM GMT
Report

 சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் சுப்பிரமணி தெருவைச் சேர்ந்த தங்கதுரைக்கும், செங்கல்பட்டை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால் தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து தங்கதுரையின் தகாத உறவு குறித்து தனது உறவினர்களுக்கு ஜெயலட்சுமி எஸ்.எம்.எஸ் மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு நேற்று முன்தினம் ஜெயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயலட்சுமியின் உறவினர் கணேசன் என்பவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தங்கதுரையிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வேறு ஒரு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து துணை நடிகர் தங்கதுரையை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.