லோகேஷ் ராகுல் பார்ம்மை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் - சுனில் கவாஸ்கர்
லோகேஷ் ராகுல் பார்ம்மை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
20 ஓவர் போட்டி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது.
இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 25ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி நீடித்து வருகிறது.
லோகேஷ் ராகுல்
20 ஓவர் போட்டி தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தில் 55 ரன் எடுத்திருந்தார். 2-வது ஆட்டத்தில் 10 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் ஒரு ரன்னிலும் அவுட்டானார். அடுத்த மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் நிலையில், சமூகவலைத்ளங்களில் லோகேஷ் ராகுல் பார்ம் பற்றி பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
சுனில் கவாஸ்கர் ஆதரவு
இந்நிலையில், லோகேஷ் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்திருந்தார். 2-வது ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டியிருந்தது.
இதனால், லோகேஷ் ராகுல் தன் விக்கெட்டை அணிக்காக தியாகம் செய்தார். அந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளிக்க ஆசைப்பட்டார். இதனால் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டமிழந்தார். அவரை விமர்சனம் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.