“இவருக்கு இனிமே எதிர்காலம் இருக்குமா என்றே தெரியல” - சுனில் கவாஸ்கர் அதிரடி
இந்திய அணியின் சீனியர் பவுலர் ஒருவருக்கு இனி எதிர்காலமே இருக்குமா என தெரியவில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 2 உலகக்கோப்பை தொடர்கள் வருவதால், தற்போது இருந்தே அதற்கான வீரர்களை தயார் செய்வதற்காக பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
2 உலகக்கோப்பைகளில் கண்டிப்பாக ஒன்றையாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
குறிப்பாக 2023-ம் ஆண்டு திட்டமிடப்பட்டிருக்கும் 50 ஓவர்கள் உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறவுள்ள நிலையில் அதனை வெல்வதற்காக இந்திய வீரர்களை கட்சிதமாக தேர்வு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
பேட்டிங்கில் பல தேர்வுகள் இருக்கும் நிலையில், பவுலிங்கில் பும்ரா, முகமது ஷமியுடன் ஒத்துழைப்பு கொடுக்கப்போகும் 3-வது வேகப்பந்துவீச்சாளர் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முதன்மை தேர்வாக இருந்த புவனேஷ்வர் குமார் தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதற்கு காரணம் கடந்த 2 வருடங்களாகவே அவரின் பவுலிங் மிக மோசமாக உள்ளது தான்.
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் கூட ரன்களை வாரி வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு எதிர்காலம் இல்லை என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
“புவனேஷ்வர் குமார் தனது வேகத்தை இழந்துவிட்டார். துள்ளியமாக பந்துவீசுவதையும் இழந்துவிட்டார். என்னைப் பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார் மீண்டும் தனது ஆரம்பக்கட்டத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கடும் முயற்சிகளுக்கு பின்னர்தான் உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
இந்திய அணி தற்போது தீபக் சஹாரை பயன்படுத்தலாம். தீபக் சஹார் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்யக்கூடியவர். மேலும் பேட்டிங்கில் கடைசி வரிசையில் கூட உதவுவார்.
இதுவரை 2 அரைசதங்களை விளாசியுள்ளார். புவனேஷ்வர் குமார் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
ஆனால் நேரங்கள் மாறுகின்றன. இது வேறு ஒருவரிடம் பணியை ஒப்படைக்க வேண்டிய நேரம்” என கவாஸ்கர் கூறியுள்ளார்.