முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை வலையில் ஓபிஎஸ் : 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,
நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார்.
மேலும், மருத்துவர் சிவகுமார் அழைத்ததின்பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் சென்னை போயஸ் கார்டன் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றும்,
மேலும் ஜெயலலிதாவால் யாருடைய துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் முக்கிய தகவல்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த டிசம்பர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான் என்று அப்பல்லோ மருத்துவர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகினார்.
அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில்,ஜெயலலிதா அவர்களுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது என்றும்,
உடனே அவருக்கு தேவையான மருத்துவ முறைகள் அனைத்தையும் தாங்கள் முறையாக பின்பற்றியதாகவும் அப்பல்லோ மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவுசெய்துள்ளது.
அந்த வகையில், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.