தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பள்ளித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், மாணவர்களின் தேர்வுகளை விரைவாக முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏற்கனவே கடந்த மாதம் முடிவடைந்தன.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 16 வரை நடைபெற உள்ளது.
அதேபோல், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.
1, 2, 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இறுதி பருவத் தேர்வுகள் ஆரம்பமாகும்.

அந்தவகையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் 16க்குள் தேர்வுகள் முடிக்கப்படும்.
இதன் பின்னர் ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஜூன் 1 அல்லது ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி மாணவர்களுக்கு சுமார் 45 முதல் 48 நாட்கள் வரை கோடை விடுமுறை கிடைக்கும்.
மேலும், புதிய கல்வியாண்டு தொடங்கும் ஜூன் மாதத்திற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.