ஒரே போட்டியில் 3 உலக சாதனைகள் படைத்த இந்திய வீரர் - குவியும் வாழ்த்து
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில்புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இந்தியாவும் இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 26வது இடத்தில் உள்ளது.
இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா இன்று தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அதேபோல் மற்றொரு தங்கம் ஆண்களுக்கான எஃப் 64 ஈட்டி எறிதல் பிரிவில் கிடைத்தது.
இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சுமித் மற்றும் சந்தீப் சவுத்ரி ஆகியோரில் முதல் சுற்றிலேயே சுமித் 66.95 மீ. தூரம் வீசி முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்தார். பின்னர் அவர் தனது இரண்டாவது முயற்சியில் 68.08 மீ. வீசி தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது 5வது முயற்சியில் 66.85 மீ. தூரம் வீசி மூன்றாவது புதிய உலக சாதனை படைத்துள்ளார்.