பெளர்ணமி காலங்களில் அதிகரிக்கும் தற்கொலைகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்கொலை
அமெரிக்காவில் உள்ள இந்தியானா மருத்துவ பல்கலைக்கழகத்தில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பௌர்ணமி நெருங்கி வருகின்ற ஒரு வாரத்தில் அதிகப்படியான தற்கொலைகள் நிகழுவது கண்டறியப்பட்டுள்ளது.
2012 - 2016 காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் தற்கொலை விகிதம் ஆகியவை குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 55 வயதை தாண்டுகின்ற நபர்கள் பௌர்ணமி சமயத்தில் தற்கொலை செய்யும் போக்கு அதிகமாக இருக்கிறது.
பௌர்ணமி?
பௌர்ணமி சமயத்தில் முழு வட்ட நிலவில் இருந்து வரும் ஒளியானது, நம் உடலின் சர்க்கேடியன் ரிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 24 மணி நேர சுழற்சியில் ஒரு மனிதன் விழித்திருக்கும்போதும், தூங்கும்போதும் ஏற்படுகின்ற மாற்றங்களை இது வரையறை செய்கின்றது. நிலவின் ஒளி அடர்த்தியாக இருக்கும்போது தான்,
மனிதர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான தற்கொலைகள் நடைபெறுவதும், மாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்துள்ளது.
மதுவுக்கு அடிமையாக உள்ள நபர்கள் அல்லது கடுமையான மன அழுத்தம் கொண்ட நபர்களுக்கு பௌர்ணமி சமயத்தில் தற்கொலை எண்ணம் அதிகரிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் கோடைகால இன்பச் சுற்றுலா காலம் முடிவுக்கு வருவதால், மீண்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.