வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. விமர்சையாக நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம்
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி கோசம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
திருச்செந்துார் ஆவணித் திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சிகளான ஆவணி 5-ம் திருநாள் அன்று இரவு 7:30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், 7-ம் திருநாள் அன்று காலை சண்முகர், வள்ளி தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் திருநாள் அன்று பச்சை சாத்திக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தேரோட்டம் கோலகலம்
5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் விநாயகர் தேர் காலை 06-00 மணிக்கு புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து 06-45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் , வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்ததது.
தொடர்ந்து அம்பாள் தேரும் நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு " யார் வாரா வீதியிலே சுவாமி வாரார் வீதியிலே" அரோகரா பக்தி கோசம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துத்சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.